Published : 08 Nov 2025 10:09 AM
Last Updated : 08 Nov 2025 10:09 AM
பிரிஸ்பன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.45 மணிக்கு பிரிஸ்பனில் நடைபெறுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் டி 20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வெல்லும். மாறாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடர் 2-2 என சமனில் முடிவடையும். எப்படி இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 வருடங்களாக டி 20 தொடரை பறிகொடுக்கவில்லை என்ற சாதனையை இந்திய அணி தக்கவைத்துக் கொள்ளும்.
கோல்டு கோஸ்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய அணி சுழற்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு கடும் அழுத்தம் கொடுத்திருந்தது. அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் கூட்டாக 10 ஓவர்களை வீசி 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். பேட்டிங்கில் ஷுப்மன் கில் 46 ரன்களை சேர்த்த போதிலும் 39 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். இதேபோன்று சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய போதிலும் விரைவாக தனது விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.
தொடர் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் இவர்கள் இருவரும் கணிசமான ரன்களை குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். அபிஷேக் சர்மா மீண்டும் ஒரு முறை பவர்பிளேவில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். நடுவரிசையில் திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா ஆகியோரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. இதில் திலக் வர்மா கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் முறையே 0, 29, 5 ரன்களில் நடையை கட்டியுள்ளார்.
ஆல்ரவுண்டர்களாக அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தொடக்க ஓவர்களில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்கும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும். ஆஷஸ் டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு முன்னணி வீரர்கள் பலர் டி 20 தொடரின் கடைசி பகுதியில் விளையாடாததால் ஆஸ்திரேலிய அணி பலவீனமாகி உள்ளது. 4-வது ஆட்டத்தில் 186 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, 4-வது ஆட்டத்தில் 168 ரன்கள் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் 119 ரன்களுக்கு சுருண்டிருந்தது.
மிட்செல் மார்ஷ், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரை மட்டுமே பேட்டிங்கில் அந்த அணி பிரதானமாக நம்பி உள்ளது. கடந்த ஆட்டத்தில் மேத்யூ ஷார்ட் தொடக்க வீரராக களமிறங்கிய நிலையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார். பந்துவீச்சில் நேதன் எலிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். கடந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் கைப்பற்றாத பென் டுவார்ஷுயிஸ் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்படக்கூடும். இது நிகழ்ந்தால் மஹ்லி பியர்ட்மேன் அறிமுக வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT