Published : 07 Nov 2025 09:36 AM
Last Updated : 07 Nov 2025 09:36 AM
புதுடெல்லி: ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஆட்டங்களை நடத்துவதற்கான நகரங்களை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன்படி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், மும்பை வான்கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியை உலகின் மிகப்பெரிய மைதானமான ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியும் இதே மைதானத்தில்தான் நடத்தப்பட்டது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி அடுத்த வாரம் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அநேகமாக போட்டிகள் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி நிறைவடையக்கூடும். இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட உள்ளது.
அங்கு 3 நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது. கண்டி, கொழும்பு மைதானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. 3-வது மைதானம் தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஒருவேளை பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அந்த ஆட்டம் இலங்கையில் நடத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT