Published : 05 Nov 2025 10:37 PM
Last Updated : 05 Nov 2025 10:37 PM
மும்பை: தென் ஆப்பிரிக்க அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், புதன்கிழமை அன்று இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி கொல்கத்தாவிலும், 2-வது போட்டி குவாஹாத்தியில் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து தொடரில் கால் பகுதியில் காயமடைந்த காரணத்தால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் விளையாடவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் தென் ஆப்பிரிக்க ஏ அணி உடனான டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடி இருந்தார். தற்போது தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுகிறார். இதே போல காயம் குணமான நிலையில் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பும் அணிக்கு திரும்பி உள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரேவிஸ், டோனி டி சோர்ஸி, ஸுபயர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்க்கோ யான்சன், கேஷவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT