Published : 28 Oct 2025 09:16 AM 
 Last Updated : 28 Oct 2025 09:16 AM
சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆனால் மோந்தா புயல் காரணமாக மழை பெய்ததால் மைதானத்தில் உள்ள அனைத்து ஆடுகளங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக முதல் நாளில் நடைபெற இருந்த அனைத்து ஆட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டன.
2-வது நாளான இன்று ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று 16 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பகல் 12 மணிக்கு போட்டிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நாளை (29-ம் தேதி) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான ஆடுகளத்தில் நடைபெறும் ஆட்டங்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள துருக்கியின் ஜெய்னெப் சோன்மெஸ், ரஷ்யாவின் தாத்யானா ப்ரோசோரோவாவுடன் மோதுகிறார். தொடர்ந்து ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற குரோஷியாவின் டோனா வெகிக், இந்தியாவின் வைஷ்ணவி அட்கரை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனைகளான மாயா ராஜேஷ்வரன் ரேவதி, ஸ்ரீவள்ளி பாமிடிபட்டி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். நடப்பு சாம்பியனான செக் குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, பிரான்சின் ஆஸ்ட்ரிட் லூ யான் ஃபூனுடன் மோதுகிறார்.
போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கிரேட் பிரிட்டனின் பிரான்செஸ்கா ஜோன்ஸ், ஜப்பானின் யமகுச்சியை எதிர்கொள்கிறார். இந்தியாவின் சகஜா யமலபள்ளி, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா நுக்ரோஹோவுடன் மோதுகிறார். இந்த ஆட்டங்கள் முதல் மைதானத்தில் நடைபெறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT