Published : 26 Oct 2025 10:46 AM
Last Updated : 26 Oct 2025 10:46 AM
தின்சுகியா: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அசாம் - சர்வீசஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நேற்று அசாமில் உள்ள தின்சுகியா நகரில் தொடங்கியது. முதலில் பேட் செய்த அசாம் அணி 17.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பிரத்யுன் சைகியா 52, ரியான் பராக் 36 ரன்கள் சேர்த்தனர்.
சர்வீசஸ் அணி சார்பில் மோஹித் ஜங்க்ரா, அர்ஜுன் சர்மா ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர். அர்ஜுன் சர்மா வீசிய 12-வது ஓவரின் 3-வது பந்தில் ரியான் பராக் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்த பந்துகளில் சுமித் காடிகோன்கர், சிப்சங்கர் ராய் ஆகியோரை வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அர்ஜுன் சர்மா 6.1 ஓவர்களை வீசி 46 ரன்களை விட்டுக்கொடுத்து ஹாட்ரிக்குடன் மொத்தம் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
மோஹித் ஜங்க்ரா 15-வது ஓவரின் கடைசி பந்தில் பிரத்யுன் சைகியாவை (52) அவுட்டாக்கினார். தொடர்ந்து 17-வது ஓவரை வீசிய ஜங்க்ரா முதல் 2 பந்துகளில் முக்தார் உசேன் (1), பார்கப் லக்கர் (0) ஆகியோரை பெவிலியனுக்கு திருப்பி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய அவர், 2 மெய்டன்களுடன் 5 ரன்களை விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் விக்கெட்களை கைப்பற்றினார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இரு பந்து வீச்சாளர்கள் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
இதையடுத்து விளையாடிய சர்வீசஸ் அணி 29.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக இர்பான் கான் 51, ஷிவம் குமார் 16 ரன்கள் எடுத்தனர். அசாம் அணி தரப்பில் ரியான் பராக் 5, ராகுல் சிங் 4 விக்கெட்களை வீழ்த்தினார்கள். 5 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய அசாம் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 21 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது. ஆகாஷ் செங்குப்தா 5, பிரத்யுன் சைகியா 0, பர்வேஜ் முஷாரஃப் 1, தினேஷ் தாஸ் 10, ரியான் பராக் 12 ரன்களில் நடையை கட்டினர். சுமித் காடிகோன்கர் 17, சிப்சங்கர் ராய் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் 25 விக்கெட்கள் சரிந்துள்ளன. கைவசம் 5 விக்கெட்கள் வைத்துள்ள அசாம் அணி 51 ரன்கள் முன்னிலையுடன் இன்று 2-வது நாள் ஆட்டத்தை விளையாட உள்ளது.
தமிழ்நாடு ரன் வேட்டை: தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான விமல் குமார் 224 பந்துகளில், 28 பவுண்டரிகளுடன் 189 ரன்கள் குவித்து ரோனித் மோர் பந்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான ஆதிஷ் 14 ரன்களில் ஒடிலெம்பா கிச்சு பந்தில் வெளியேறினார். பிரதோஷ் ரஞ்ஜன் பால் 252 பந்துகளில், 19 பவுண்டரிகளுடன் 156 ரன்களும், ஆந்த்ரே சித்தார்த் 30 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT