Published : 24 Oct 2025 09:38 PM
Last Updated : 24 Oct 2025 09:38 PM
சென்னை: வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகி உள்ளது. இதன் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் உறுதி செய்துள்ளது.
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. நடப்புச் சாம்பியன் ஜெர்மனி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் தென் ஆபிரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
போட்டியை நடத்தும் இந்தியா ‘பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளும் உள்ளன. ‘சி' பிரிவில் அர்ஜென்டினா, நியூஸிலாந்து, ஜப்பான், சீனா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘டி' பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா ஆகிய அணிகளும், ‘இ' பிரிவில் நெதர்லாந்து,மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா ஆகிய அணிகளும் ‘எஃப்' பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, வங்கதேசம் ஆகியஅணிகளும் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தான் விலகல்: இந்த தொடரில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. தங்களால் இந்த தொடரில் பங்கேற்க முடியாது என பாகிஸ்தான் தரப்பில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு மாற்றாக விளையாடும் அணி விரைவில் இறுதி செய்யப்படும் என தகவல்.
கடந்த 2021-ல் புவனேஸ்வரில் நடைபெற்ற இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 11-வது இடம் பிடித்தது. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை தாக்கி அழித்தன. இதன் தாக்கம் இரு நாட்டு அணிகள் பங்கேற்று விளையாடும் விளையாட்டு தொடர்களிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT