Published : 14 Oct 2025 09:13 PM
Last Updated : 14 Oct 2025 09:13 PM
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாட உள்ளனர்.
இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். இந்தச் சூழலில் அவர்களது அனுபவம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். அவர்கள் இருவரும் எதிர்வரும் 2027 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்களா என்பது குறித்தும் கம்பீர் பேசியுள்ளார்.
“உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. மேலும், இப்போதைய சூழலில் நமது கவனத்தை வைக்கலாம் என நினைக்கிறேன். அவர்கள் இருவரும் தரமான வீரர்கள். அவர்கள் அணிக்குள் வருவது நிச்சயம் ஆஸ்திரேலிய தொடரில் நமக்கு பலன் தரும். அவர்கள் இருவருக்கும், இந்திய அணிக்கும் இந்தத் தொடர் சிறப்பானதாக அமையும்.
கடந்த 2-3 ஆண்டுகளாக இந்திய அணி சிறந்த முறையில் ஒருநாள் கிரிக்கெட் விளையாடி வருகிறது. நமக்கு அணியில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் பல்வேறு ஆட்டங்களை வென்று கொடுத்தவர்கள். அதையே தான் நாங்கள் அவர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம். களத்தில் தங்கள் மேஜிக்கை அவர்கள் செய்ய வேண்டுமென்பது எங்கள் விருப்பம்” என கம்பீர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT