Published : 14 Oct 2025 08:37 AM
Last Updated : 14 Oct 2025 08:37 AM
புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி நாளான இன்று மேற்கொண்டு 58 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் ஷுப்மன் கில் 129, சாய் சுதர்சன் 87 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது.
இதனால் 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 49 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ஜான் கேம்பல் 87, ஷாய் ஹோப் 66 ரன்களுடன் களத்தில் இருந்தனர். டேக் நரைன் சந்தர்பால் 10, அலிக் அத்தானஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து விளையாடியது.
பார்ட்னர்ஷிப்பை சிறப்பாக கட்டமைத்த ஜான் கேம்பல் 174 பந்துகளில், 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் தனது முதல் சதத்தை விளாசினார். அதேவேளையில் ஷாய் ஹோப் 204 பந்துகளில், 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 3-வது சதமாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 வருடங்களுக்கு பிறகு அவர், அடித்த சதமாகவும் இது அமைந்தது. கடைசியாக அவர், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்து இருந்தார். 3-வது விக்கெட்டுக்கு 295 பந்துகளை எதிர்கொண்டு 177 ரன்கள் சேர்த்து கடும் சவால் அளித்த இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்தார்.
ஜான் கேம்பல் 199 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ராஸ்டன் சேஸ் சீராக ரன்கள் சேர்த்தார். நிதானமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 214 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் போல்டானார். இதன் பின்னர் களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டெவின் இம்லாக் 12 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
இதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆட்டம் கண்டது. ராஸ்டன் சேஸ் 72 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் பதிலி வீரரான தேவ்தத் படிக்கலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஹாரி பியரை டக் அவுட்டில் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். ஜோமன் வாரிக்கன் (3), ஆண்டர்சன் பிலிப் (2) ஆகியோர் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் அவுட்டானார்கள். 311 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த நிலையில் ஜஸ்டின் கீரிவ்ஸ், ஜெய்டன் சீல்ஸ் ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை சோதனைக்கு உட்படுத்தியது.
இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 133 பந்துகளை எதிர்கொண்டு 79 ரன்களை சேர்த்த பிறகுதான் பிரிந்தது. ஜெய்டன் சீல்ஸ் 67 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தை ஸ்கொயர் லெக் திசையில் அடித்த போது வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் ஆனது. முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 118.5 ஓவர்களில் 390 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 85 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முகமது சிராஜ் 2 விக்கெட்களையும் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஜோமல் வாரிக்கன் பந்தில் ஆண்டர்சன் பிலிப்பிடம் பிடிகொடுத்து வெளியேறினார். கே.எல்.ராகுல் 54 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களும், சாய் சுதர்சன் 47 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
கைவசம் 9 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 58 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை சந்திக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இதனால் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என முழுமையாக கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT