Published : 10 Oct 2025 10:30 AM
Last Updated : 10 Oct 2025 10:30 AM
பொதுவாக கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நடுவர்கள் போட்டிக்கு பயன்படுத்தும் பந்தின் எடை, வடிவம் மற்றும் பந்தின் தன்மை ஆகியவற்றை சோதித்து பார்ப்பார்கள். அனைத்தும் விதிமுறைகளின்படி சரியாக இருந்தால் மட்டுமே அந்த பந்தை பயன்படுத்துவார்கள்.
எம்சிசி கிரிக்கெட் சட்ட விதிகளின்படி பந்துகளின் அளவு குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும். இது ஆடவர், மகளிர், ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தகுந்தவாறு மாறுபடும். ஆடவர் கிரிக்கெட்டில் பந்தின் எடை குறைந்தபட்சம் 155.9 கிராம் எடையும் அதிகபட்சம் 163 கிராம் எடையும் இருக்க வேண்டும். அதேவேளையில் பந்தின் சுற்றளவு குறைந்தபட்சம் 22.4 சென்டி மீட்டரும், அதிகபட்சம் 22.9 சென்டி மீட்டரும் இருக்க வேண்டும்.
இந்த பந்துகளின் சுற்றளவை கணக்கிடுவதற்கு நடுவர்களிடம் பால் கேஜ் அல்லது ரிங் கேஜ் என்ற கருவி இருக்கும். இதில் இரண்டு வளையங்கள் இருக்கும். ஒன்றன் பெயர் கோ கேஜ். இது அதிக விட்டம் கொண்டது. இதன் வழியாக பந்தை நுழைக்கும்போது எந்தவித இடையூறும் இல்லாமல் செல்ல வேண்டும். அப்படி இருந்தால் விதிமுறைக்குட்பட்ட அந்த பந்து போட்டியில் பயன்படுத்த அனுமதிக்கப்படும். அதாவது கோ கேஜின் சுற்றளவைவிட பந்தின் சுற்றளவு அதிகமாக இருக்கக்கூடாது. ஒருவேளை கோ கேஜில் பந்தை நுழைக்கும் போது அது தட்டி நின்றால் பந்தின் சுற்றளவு அதிகமாக இருப்பதாக கருதி அந்த பந்தை பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்கள். வேறு ஒரு பந்தைதான் பயன்படுத்த வேண்டியது இருக்கும்.
அருகில் இருக்கும் மற்றொரு வளையம் நோ கோ கேஜ் என்றழைக்கப்படும். இது கோ கோஜ் சுற்றளவைவிட சற்று குறைவாக இருக்கும். இந்த வளையத்தில் பந்தை நுழைக்கும் போது அது வெளியே வரக்கூடாது. அவ்வாறு இருந்தால் அந்த பந்து விதிமுறைகளின் படி சரியாக உள்ளதாக கருதி அனுமதிக்கப்படும். ஒருவேளை பந்து இந்த வளையத்தின் வழியே வெளியே வந்து
விட்டால் அந்த பந்தின் சுற்றளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவாக உள்ளதாக கூறி அதை போட்டியில் பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்கள்.
போட்டியின் தொடக்கத்தில் மட்டும் அல்ல இடையில் கூட இந்த ரிங் கேஜை பரிசோதனை செய்வார்கள். போட்டியின் போது பந்து சேதம் அடைந்து பந்து வீசுவதற்கு உகந்ததாக இல்லை என அணியின் கேப்டன் கருதினால் இது குறித்து களநடுவரிடம் முறையிடுவார்கள். அப்போது அந்த பந்து பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளதா என ரிங் கேஜ் கருவியை கொண்டு நடுவர் சோதனை செய்வார். இதில் பந்து நுழைந்து வெளியேவந்துவிட்டால் அந்த பந்தை தொடர்ந்து பயன்படுத்தலாம். மாறாக பந்து வளையத்துக்குள் நுழையவில்லை என்றால் அந்த பந்தின் தன்மை மாறிவிட்டதாக கருதி அதை அகற்றிவிட்டு வேறு பந்தை
பயன்படுத்துவார்கள்.
கோ கேஜ் வளையத்தில் பந்து நுழைந்தாலும், நோ கோஜ் வளையத்தில் பந்தை வைத்து சோதிப்பார்கள். இதில் வளையத்தின் பக்கவாட்டில் இடைவெளி இருந்தால் அந்த பந்து அதன் தன்மையை இழந்துவிட்டதாக கருதி அகற்றிவிடுவார்கள். அதற்கு பதிலாக வேறு பந்து பயன்படுத்தப்படும். ஆனால் ஓரளவு மட்டுமே இடைவெளி இருந்தால் அந்த பந்தை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூறிவிடுவார்கள். பந்து வீசும் அணி புகார் கூறுவதையும், அதன் பின்னர் நடுவர் பந்தை சோதித்துவிட்டு சரியாகத்தான் உள்ளது என கூறி அந்த பந்தை தொடர்ந்து பயன்படுத்தக்கூறுவதும், இதற்கு அந்த அணியின் கேப்டன் விரக்தியடைவதும் களத்தில் நாம் அடிக்கடி பார்க்கக்கூடியதாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT