Published : 08 Oct 2025 06:16 AM
Last Updated : 08 Oct 2025 06:16 AM
புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அகமதாபாத்தில் இருந்ததை போன்று டெல்லி ஆடுகளத்தில் புற்கள் சீராக இல்லை. ஒரு சில பகுதிகளில் மட்டுமே புற்கள் உள்ளன. மேலும் ஆடுகளத்தின் அடிப்பகுதி கருப்பு மண் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக கருப்பு மண் கொண்டு செய்யப்படும் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும். மேலும் ஆடுகளம் உலரத் தொடங்கும் போது சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும்.
விரைவான அவுட் பீல்டு: முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற அகமதாபாத் ஆடுகளம் சிவப்பு மண் கொண்டு தயார் செய்யப்பட்டு இருந்தது. மேலும் ஆடுகளத்தில் புற்கள் நான்கு மில்லி மீட்டர் உயரம் வரை இருந்ததால் பந்துகள் நன்கு பவுன்ஸாகின. இந்த போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 44.1 ஓவர்களும், 2-வது இன்னிங்ஸில் 45.1 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடித்தது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் அவுட் பீல்டு விரைவாக இருக்கும். மேலும் எல்லைக்கோட்டின் தூரமும் சற்று குறைவு. இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழியக்கூடும். கடைசியாக இங்கு 2023-ம்ஆண்டு நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதியிருந்தன. 3 நாட்களில் முடிவடைந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT