Published : 28 Sep 2025 08:33 AM
Last Updated : 28 Sep 2025 08:33 AM
திருச்சி: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் நரேன்பூரில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதன. ‘ஏ’ பிரிவில் ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கோவா அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் மணிப்பூர், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, அசாம் அணிகள் உள்ளன. தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி சத்தீஸ்கருடன் மோதுகிறது. தொடர்ந்து 5-ம் தேதி மேற்கு வங்கத்துடனும், 9-ம் தேதி ஒடிசாவுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது தமிழ்நாடு அணி. போட்டிகள் அனைத்தும் ஆர்.கே.எம் ஆஷ்ரம மைதானத்தில் நடைபெறுகின்றன.
லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா இரு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 13-ம் தேதி நடைபெறுகின்றன. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 15-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக தமிழக அணியினர் நேற்று திண்டுக்கலில் இருந்து ரயிலில் சத்தீஸ்கர் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள், திருச்சி ரயில் நிலையத்தை அடைந்த போது அங்கு திருச்சி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கால்பந்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT