Published : 27 Sep 2025 12:48 AM
Last Updated : 27 Sep 2025 12:48 AM
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த சூழலில் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் இன்று துபாயில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் அபிஷேக் சர்மா வழக்கம் போலவே பேட்டிங்கில் அதிரடி காட்டினார். அவர் 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து 66 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன், 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா, 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பதும் நிசங்கா 58 பந்துகளில் 108 ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் ஓப்பனிங் இறங்கிய குசால் மெண்டிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த குசால் பெரேரா நிசங்காவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டினார். 58 ரன்கள் குவித்த அவர் 12வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறைப்படி இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் தட்டுத் தடுமாறி இரண்டு விக்கெட்களுக்கு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. 3 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாவத் முதல் பந்திலேயே 3 ரன்களை எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT