Published : 23 Sep 2025 08:20 PM
Last Updated : 23 Sep 2025 08:20 PM
லண்டன்: 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கள நடுவராக செயல்பட்ட டிக்கி பேர்ட் காலமானார். அவருக்கு வயது 92.
கடந்த 1933-ல் இங்கிலாந்தின் யார்க்ஷையரில் அவர் பிறந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் யார்க்ஷையர் மற்றும் லெஷ்டர்ஷயர் அணிக்காகவும் கிரிக்கெட் விளையாடி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 93 போட்டிகளில் 3,314 ரன்கள் எடுத்துள்ளார். முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட் விளையாட முடியாத சூழலுக்கு ஆளானார்.
பின்னர் 1970-களில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் கள நடுவராக அவர் செயல்பட தொடங்கினார். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட தொடங்கினார். மொத்தம் 66 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 69 ஒருநாள் போட்டிகளில் நடுவராக அவர் செயல்பட்டுள்ளார்.
மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கள நடுவராக செயல்பட்டுள்ளார். இதில் 1983-ல் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் நடுவராக பேர்ட் செயல்பட்டார். இதில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
கடந்த 1996-ல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிதான் நடுவராக அவர் செயல்பட்ட கடைசி சர்வதேச போட்டி. அதன் பின்னர் சில ஆண்டுகள் கவுன்ட்டி கிரிக்கெட்டில் நடுவராக செயல்பட்டார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று அவர் காலமானார். அவரது மறைவை யார்க்ஷையர் கவுன்ட்டி கிரிக்கெட் கிளப் உறுதி செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT