Published : 20 Sep 2025 07:46 AM
Last Updated : 20 Sep 2025 07:46 AM
அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின.
இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 45 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசினார். அவர், 41 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார். சர்வதேச டி20 அரங்கில் சஞ்சு சாம்சனுக்கு இது 3-வது அரைசதமாக அமைந்தது.
முன்னதாக ஷுப்மன் கில் 5 ரன்களில் ஷா ஃபைசல் பந்தில் போல்டானார். அபிஷேக் சர்மா 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ராமானந்தி பந்தில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா ஒரு ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
அக்சர் படேல் 13 பந்துகளில் 26 ரன்களும், திலக் வர்மா 18 பந்துகளில் 29 ரன்களும், ஷிவம்துபே 5 ரன்களும், அர்ஷ்தீப் சிங் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஹர்ஷித் ராணா 13 ரன்களும், குல்தீப் யாதவ் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 189 ரன்கள் இலக்குடன் ஓமன் அணி பேட் செய்தது.
அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஆமீர் கலீம் 64 ரன்கள், ஹம்மாத் மிர்சா 51 ரன்களும் எடுத்தனர். அந்த அணியின் கேப்டன் ஜதீந்தர் சிங் 32 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சன் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT