Published : 15 Sep 2025 10:47 PM
Last Updated : 15 Sep 2025 10:47 PM
சென்னை: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. திங்கட்கிழமை அன்று குரூப் சுற்று ஆட்டத்தில் ஓமன் அணியை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அந்த இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் குரூப் ‘ஏ’-வில் 4 புள்ளிகளுடன் இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தில் உள்ளது. இந்திய அணியின் நெட் ரன் ரேட்டும் +4.793 என உள்ளது.
குரூப் பிரிவில் ‘டாப் 2’ இடங்களை பிடிக்கும் அணிகள்தான் அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் குரூப் சுற்றில் 2 ஆட்டங்களில் ஓமன் அணி தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. அதே நேரத்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இப்போது குரூப் ‘ஏ’-வில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் அணிகளில் ஏதேனும் ஒரு அணி தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். அந்த இரு அணிகளும் வரும் 17-ம் தேதி நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. அதில் வெற்றி பெறுகின்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி அடுத்த போட்டியில் ஓமன் உடன் வரும் 19-ம் தேதி விளையாடுகிறது. 20-ம் தேதி முதல் ‘சூப்பர் 4’ சுற்று தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT