Published : 15 Sep 2025 06:59 AM
Last Updated : 15 Sep 2025 06:59 AM
புதுடெல்லி: உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 57 கிலோபிரிவு போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மினும், போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவும் மோதினர். இதில் ஜாஸ்மின் லம்போரியா 4-1 (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) என்ற கணக்கில் போலந்து வீராங்கனை ஜூலியாவை வீழ்த்தினார். போலந்து வீராங்கனை ஜூலியா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற 9-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பெற்றார். இதற்கு முன்பு இந்திய வீராங்கனைகள் மேரி கோம் (6 முறை தங்கம்), நிகத் ஜரீன் (2 முறை), சரிதா தேவி, ஜென்னி, லேகா, நிது கங்காஸ், லாவ்லினா போர்கோஹெய்ன், சவிதா புரா (தலா ஒரு முறை) ஆகியோர் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று உள்ளனர். தனது 3-வது உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே 24 வயதான ஜாஸ்மின் தங்கம் வென்று சாதித்துள்ளார்.
48 கிலோ பிரிவு: மகளிர் 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மினாக் ஷியும், கஜகஸ்தான் வீராங்கனை நஸிம் கியாஜாய்பேவும் மோதினர். இதில் மினாக் ஷி 4-1 என்ற கணக்கில் நஸிமை வீழ்த்தி தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
நூபுருக்கு வெள்ளி: மற்றொரு இந்திய வீராங்கனை நுாபுர் ஷியோரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் நூபுரும், போலந்து வீராங்கனை அகதா காஸ்மார்ஸ்காவும் மோதினர். இதில் அகதா காஸ்மார்ஸ்கா 3-2 என்ற கணக்கில் நூபுரை வீழ்த்தி தங்கம் வென்றார். இதையடுத்து நூபுருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
மகளிர் 80 கிலோ பிரிவு போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை பூஜா வெண்கலத்தைக் கைப்பற்றினார். அரை இறுதியில் பூஜா, இங்கிலாந்து வீராங்கனை எமிலி அஸ்கித்திடம் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. போட்டியின் முடிவில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT