Published : 12 Sep 2025 07:16 AM
Last Updated : 12 Sep 2025 07:16 AM
ஹாங் காங்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவில் சாட்விக்-ஷிராக் ஜோடியும் கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.
ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 20-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்ஷயா சென், சகநாட்டைச் சேர்ந்த 34-ம் நிலை வீரரான ஹெச்.எஸ்.பிரனாயுடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 15-21, 21-18, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற தொடர்களில் தற்போதுதான் முதன்முறையாக லக்ஷயா சென் கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
23 வயதான லக்ஷயா சென், கால் இறுதி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த 31-ம் நிலை வீரரான ஆயுஷ் ஷெட்டியுடன் மோதுகிறார். ஆயுஷ் ஷெட்டி 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோடை நரோகாவை 21-19, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி தாய்லாந்தின் சுக்பூன், தீரரட்சகுல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 18-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் இந்திய ஜோடி, மலேசியாவின் ஜுனைடி ஆரிஃப், ராய் கிங் யாப் ஜோடியுடன் மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT