Published : 07 Sep 2025 10:45 PM
Last Updated : 07 Sep 2025 10:45 PM

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக் கோப்பையை வென்றது இந்திய ஹாக்கி அணி! 

ராஜ்கிர்: ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது.

பிஹார் மாநிலம் ராஜ்கிரில் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று சீனாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அபிஷேக் 2 கோல்கள் அடித்தார். சுக்ஜீத் சிங், ராஜ்குமார் பால், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லக்ரா ஷில்லானந்த் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, கொரியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் கொரிய அணியை 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2017ஆம் ஆண்டு மலேசிய அணியை இந்திய அணி வீழ்த்தியது. இன்றைய போட்டியில் முதல் நொடிகளுக்குள் இந்திய அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.

கொரிய அணி கடுமையான அழுத்தத்தை கொடுத்தபோதும் இந்திய அணி வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த வெற்றியை சாத்தியமாக்கி உள்ளனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x