Published : 06 Sep 2025 06:54 AM
Last Updated : 06 Sep 2025 06:54 AM
லார்ட்ஸ்: இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. மேத்யூ ப்ரீட்ஸ்கே 77 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் விளாசினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்தார். எய்டன் மார்க் ரம் 49, ரியான் ரிக்கெல்டன் 35, கார்பின் போஷ் 32 ரன்கள் சேர்த்தனர். டெவால்ட் பிரேவிஸ் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 4, ஆதில் ரஷித் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
331 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணியானது 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 61, ஜோ ரூட் 61 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 58 ரன்களும் சேர்த்தனர்.
செனுரன் முத்துசாமி வீசிய கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்தன. ஜோப்ரா ஆர்ச்சர், ஷகிப் மஹ்முத் களத்தில் இருந்தனர். முதல் 5 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. கடைசி பந்தில் சிக்ஸர் விளாசினால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நந்த்ரே பர்கர் 3, கேசவ் மகராஜ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என தன் வசப்படுத்தியது. முதல் போட்டியில் அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி போட்டி சவுத்தாம்டனில் நாளை (7-ம் தேதி) நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT