Published : 02 Sep 2025 10:58 AM
Last Updated : 02 Sep 2025 10:58 AM
துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.39.95 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது ஐசிசி. கடந்த முறை ரூ.11.65 கோடி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது பரிசுத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. நவம்பர் 2 வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இந்தத்தொடரின் மொத்த பரிசுத் தொகைரூ.122.50 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2022-ம் ஆண்டுநியூஸிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட 297 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் கடந்த முறை ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.31 கோடியாக மட்டுமே இருந்தது.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.39.95 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த வகையில் கடந்த முறை பட்டம் வென்ற அணிக்கு ரூ.11.65 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டிருந்தது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். இது கடந்தமுறை ரூ.5.30 கோடியாக இருந்தது. அரை இறுதியில் தோல்வி அடையும் அணிகள் தலா ரூ.9.89 கோடியை பெறும். 5 மற்றும் 6-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.62 லட்சமும், 7 மற்றும் 8-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.24.71 லட்சமும் பரிசுத் தொகை கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT