Published : 29 Aug 2025 11:52 PM
Last Updated : 29 Aug 2025 11:52 PM
ஹராரே: ஜிம்பாப்வே உடனான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் 7 ரன்களில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி ஓவர் வரை இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை அன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது இலங்கை அணி. நிசங்கா 76, ஜனித் லியனகே 70, கமிந்து மெண்டிஸ் 57, குஷால் மெண்டிஸ் 38, சமரவிக்ரமா 35 ரன்கள் எடுத்தனர்.
299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஜிம்பாப்வே அணி விரட்டியது. அந்த அணி தரப்பில் பென் கர்ரன் 70, கேப்டன் வில்லியம்ஸ் 57, சிக்கந்தர் ராசா 92, டோனி முயோங்கா 52 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வே அணி. அதனால் 7 ரன்களில் இலங்கை அணி வெற்றி பெற்றது. வெற்றியை நெருங்கி வந்து கடைசியில் நழுவ விட்டது ஜிம்பாப்வே.
ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அதை அந்த அணி எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இலங்கை அணியின் தில்ஷன் மதுஷங்கா அந்த ஓவரை வீசினார். முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி தன் அணியின் வெற்றிக்கு அவர் உதவினார். சிக்கந்தர் ராசா, பிராட் எவான்ஸ், ரிச்சர்ட் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 8-வது பவுலர் ஆனார் மதுஷங்கா. ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார்.
இந்த தொடரின் அடுத்த போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. கான் பின்னர் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT