Published : 22 Aug 2025 12:20 PM
Last Updated : 22 Aug 2025 12:20 PM
கொல்கத்தா: அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், மேற்கு வங்க மாநில அமைச்சருமான மனோஜ் திவாரி.
“பாகிஸ்தான் உடன் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவது எனக்கு எனக்கு கொஞ்சம் சர்ப்ரைஸ் தான். பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்தது. தாக்குதலுக்கு தக்க பதிலடியை இந்தியா கொடுக்க வேண்டும் என அப்போது பேசப்பட்டது.
இருப்பினும் அடுத்த சில மாதங்களில் இவை அனைத்தையும் மறந்து விட்டோம். இந்த போட்டி நடைபெறுகிறது என்பதை நம்பவே எனக்கு கடினமாக உள்ளது. மனித உயிரின் மதிப்பு இவ்வளவு தானா? பாகிஸ்தான் அணி உடன் விளையாடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? விளையாட்டை விட மனித உயிரின் மதிப்பு அதிகம்” என மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இம்முறை டி20 வடிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் செப்டம்பர் 10-ல் மோதுகிறது. 14-ம் தேதி பாகிஸ்தானுடனும், 19-ம் தேதி ஓமனையும் எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.
இதனிடையே கடந்த ஏப்ரலில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா தாக்குதலை நடத்தியது.
ஏற்கெனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்டில் இந்திய அணி பங்கேற்பதில்லை என்ற முடிவு கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இது மேலும் தீவிரமாகியுள்ளது. இதனால் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் உடன் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT