Last Updated : 18 Aug, 2025 10:31 PM

 

Published : 18 Aug 2025 10:31 PM
Last Updated : 18 Aug 2025 10:31 PM

‘லார்ட்ஸ் வெற்றி என்றென்றும் என் நினைவில் இருக்கும்’ - ஷோயப் பஷீர் பகிர்வு!

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியான உணர்வு தனக்குள் என்றென்றும் நிலைத்திருக்கும் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 10 முதல் 14-ம் தேதி வரையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தன. இந்தப் போட்டியில் 5-ம் நாளான்று இங்கிலாந்து அணி 22 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. ஜடேஜா 61 ரன்கள் உடன் ஒரு முனையில் இங்கிலாந்து அணியை அச்சுறுத்திய நிலையில் மறுமுனையில் சிராஜ் 30 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார்.

“இந்திய அணி உடனான டெஸ்ட் தொடரின் போது எட்ஜ்பாஸ்டனில் மொயின் அலியை நான் சந்தித்திருந்தேன். அப்போது என்னை ‘கேரம் பால்’ வீசுமாறு அவர் ஊக்கப்படுத்தினார். அதன்படி நானும் முயற்சி செய்தேன். அதுவரை நான் வேரியேஷனில் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். ஆனால், என்னால் முடியும் என்ற நம்பிக்கையை ‘மோ’ (மொயின் அலி) தான் விதைத்தார். நான் பிரமித்து பார்க்கும் வீரர் அவர். இங்கிலாந்தில் ஆஃப் ஸ்பின்னராக விளையாடுவது எளிதான காரியம் அல்ல.

சிராஜ் விக்கெட்டை ஏற்கெனவே நான் இந்த தொடரில் எட்ஜ்பாஸ்டன் போட்டியில் கைப்பற்றி இருந்தேன். மணிக்கு 43 முதல் 44 மைல் என்ற மெதுவான வேகத்தில் அந்த பந்தை அவருக்கு நான் வீசி இருந்தேன். லார்ட்ஸ் போட்டியில் நாங்கள் வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும் எங்களுக்கு விக்கெட் விழவில்லை. அந்த சூழலில்தான் கேப்டன் ஸ்டோக்ஸ் என்னை பந்து வீச அழைத்தார். சிராஜுக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுக்கும் விதமாக ஜோ ரூட்டை சில்லி பாயிண்டில் நிறுத்தினேன்.

என்னால் முடிந்த அளவுக்கு பந்தை சுழல செய்திருந்தேன். அதிர்ஷ்டவசமாக அந்த லெந்த் அவரது பேட்டில் பட்டு தரையில் உருண்டு பெயில்ஸ்ஸை விழ செய்தது. முதலில் நான் எனது ஆங்கிளில் இருந்து அதை சரியாக பார்க்கவில்லை. அதன் பின்னர்தான் விக்கெட் விழுந்ததை அறிந்தேன். அந்த மகிழ்ச்சியான தருணம் என்றென்றும் என் நினைவில் இருக்கும்” என பஷீர் கூறியுள்ளார்.

இந்த தொடர் 2-2 என சமனில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. லார்ட்ஸ் போட்டிக்கு பிறகு காயம் காரணமாக பஷீர் தொடரில் இருந்து வெளியேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x