Published : 17 Aug 2025 03:09 PM
Last Updated : 17 Aug 2025 03:09 PM
லாகூர்: வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த அணியின் அனுபவ வீரர்களான பாபர் அஸம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு அந்த நாட்டு கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது. ஏனெனில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் பாபரும், ரிஸ்வானும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாபர் 18, ரிஸ்வான் 20-வது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு இறுதியில் இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தனர். அதன் பின்னர் இருவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இருவருக்கும் அந்த அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை.
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்ஸான், சஹீப்ஸாதா ஃபர்ஹான், சல்மான் மிர்ஸா, ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் சுஃப்யான் மொகிம்.
ஆசிய கோப்பை 2025: ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி இரு அணிகளும் துபாயில் நடைபெறும் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT