Published : 13 Aug 2025 10:21 AM
Last Updated : 13 Aug 2025 10:21 AM
டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்களில் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என பாகிஸ்தான் வென்றது. தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இரண்டாவது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றது.
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷாய் ஹோப் 94 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். லீவிஸ் 37, சேஸ் 36 மற்றும் கிரீவ்ஸ் 43 ரன்கள் எடுத்தனர்.
295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. அந்த அணி 29.2 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சல்மான் ஆகா 30, முகமது நவாஸ் 23 ரன்கள் எடுத்தனர். பாபர் அஸம் 9 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் உட்பட 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தரப்பில் 7.2 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜேடன் சீல்ஸ்.
202 ரன்களில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததை அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கு இந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வென்றுள்ளது. கடைசியாக கடந்த 1991-ல் பாகிஸ்தானை ஒருநாள் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு இப்போதுதான் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT