Published : 03 Aug 2025 10:15 AM
Last Updated : 03 Aug 2025 10:15 AM

லயோனல் மெஸ்ஸி டிசம்பரில் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்: கங்குலி உள்ளிட்ட பிரபலங்களுடன் கால்பந்து விளையாடுகிறார்

கொல்கத்தா: அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும் மெஸ்ஸி சந்திக்கிறார்.

லயோனல் மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தை முன்பதிவு செய்வது உட்பட அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் மெஸ்ஸியிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப் படுத்தலுக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் காத்திருப்பததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

மெஸ்​ஸியின் சுற்​றுப்​பயணம் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. அவரது அதி​காரப்​பூர்வ அறி​விப்​புக்​காக நாங்​கள் காத்​திருக்​கிறோம், ஒரு​வேளை இதுதொடர்​பான அறி​விப்பு மெஸ்​ஸியின் சமூக வலைதள பக்​கத்​தில் விரை​வில் வெளி​யாகக்​கூடும்” என கொல்​கத்தா வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

பயணத்​திட்​டத்​தின்​படி, லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்​பர் 12-ம் தேதி இரவு 10 மணி​யள​வில் கொல்​கத்​தாவுக்கு வந்து சேரு​வார். இங்கு அவர், இரண்டு பகல், ஒரு இரவு தங்​கு​வார். 13-ம் தேதி காலை 9 மணி அளவில் பிரபலங்​களு​டன் நடை​பெறும் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் மெஸ்ஸி கலந்து கொள்​கிறார். தொடர்ந்து கொல்​கத்தா விஐபி சாலை​யில் உள்ள லேக் டவுன் பூமி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைக்​கிறார். உலகிலேயே மெஸ்​ஸிக்கு வைக்​கப்​பட்​டுள்ள மிக உயர​மான சிலை​யாக இது அமை​யும் என போட்டி ஏற்​பாட்​டாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதன் பின்​னர் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானம் செல்​லும் லயோனல் மெஸ்​ஸி, அங்கு பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை நடை​பெறும் இசை நிகழ்ச்சி மற்​றும் கோட் (GOAT) கோப்பை போட்​டி​யில் கலந்து கொள்​கிறார். சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்​கள் நடை​பெறும் இந்த நிகழ்ச்​சி​யில் மெஸ்ஸி ஆயிரக்​கணக்​கான குழந்​தைகளு​டன் உரை​யாட​வும் உள்​ளார்.

7 பேர் கலந்து கொண்டு விளை​யாடும் இந்த போட்​டி​யில் சவுரவ் கங்​குலி, லியாண்​டர் பயஸ், ஜான் ஆபிர​காம், பாய்ச்​சுங் பூட்​டியா உள்​ளிட்​டோருடன் இணைந்து லயோனல் மெஸ்ஸி விளை​யாட உள்​ளார். இந்த போட்டி வழக்​கம்​போல் இல்​லாமல் மெது​வான தொடு​தல் கொண்​ட​தாக இருக்​கும். இந்த போட்​டியை காண டிக்​கெட் விற்​பனை செய்​யப்பட உள்​ளது. டிக்​கெட்​டின் விலை ரூ.3,500 ஆக இருக்​கக்​கூடும் என கூறப்​படு​கிறது. ஈடன் கார்​டன் மைதானத்​தில் 68 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்​ளது.

நிகழ்ச்​சி​யின் போது மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி, மெஸ்​ஸியை கவுரவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கொல்​கத்தா நிகழ்ச்​சிகளை முடித்​துக் கொண்டு அன்​றைய தினம் மாலை​யில் அதானி அறக்​கட்​டளை​யின் சாந்​தி​கி​ராம் தலை​மையகத்​தில் நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​ப​தற்​காக அகம​தா​பாத் செல்​கிறார் மெஸ்​ஸி.

தொடர்ந்து டிசம்​பர் 14-ம் தேதி மும்​பை​யில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளில் மெஸ்ஸி கலந்து கொள்​கிறார். மாலை 5.30 மணி அளவில் வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் கோட் கோப்பை போட்​டி​யில் விளை​யாடு​கிறார். இதற்​கிடையே தோனி, விராட் கோலி உள்​ளிட்​டோருடன் மெஸ்ஸி கிரிக்​கெட் விளை​யாடக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகின. ஆனால் இதை போட்டி ஏற்​பாட்​டாளர்​கள் மறுத்​துள்​ளனர்.

மும்பை நிகழ்ச்​சி​யின் போது இந்​திய கால்​பந்து அணி​யுடன் மெஸ்ஸி கலந்​துரை​யாட உள்​ளார். இதைத் தொடர்ந்து 15-ம் தேதி டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடியை சந்​திக்​கிறார் மெஸ்​ஸி. அன்​றைய தினம் பிற்​பகல் 2.15 மணி அளவில் பெரோஷா கோட்லா மைதானத்​தில் நடை​பெறும் கோட் கோப்பை போட்​டி​யிலும் மெஸ்ஸி விளை​யாடு​கிறார். 4 நகரங்​களில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளி​லும் இந்​தி​யா​வின் அடுத்த தலை​முறை இளம் கால்​பந்து வீரர்​களை ஊக்​கப்​படுத்​தும் வகை​யில் அவர்​களு​டன் மெஸ்ஸி கலந்​துரை யாடு​கிறார். இந்த நிகழ்ச்சி 30 முதல் 40 நிமிடங்​கள் நடத்த ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. கடைசி​யாக மெஸ்ஸி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற கண்​காட்சி போட்​டி ஒன்​றில்​ விளை​யாடி இருந்​தார்​. அதன்​ பின்​னர்​ அவர், தற்​போது இந்​தி​யா வருகைதர உள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x