Last Updated : 26 Jul, 2025 11:45 PM

 

Published : 26 Jul 2025 11:45 PM
Last Updated : 26 Jul 2025 11:45 PM

அமீரகத்தில் ‘ஆசிய கோப்பை 2025’ கிரிக்கெட் தொடர்: செப். 14-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை!

துபாய்: ஆசிய கோப்பை - 2025க்கான தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28-ம் தேதி வரையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்று, ‘சூப்பர் 4’ சுற்று மற்றும் இறுதிப் போட்டி என ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்கிறது. கடந்த 2023-ல் இந்திய அணி ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

குரூப் - ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், குரூப் - பி பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங் காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த தொடரில் மொத்தம் 19 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. துபாய் மற்றும் அபுதாபியில் ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் வரை இடம்பெறலாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதில் குரூப் சுற்று ஆட்டம் உறுதியாகி உள்ளது. இரு அணிகளும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறினால் அந்த சுற்றிலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதிலும் விளையாடும் வாய்ப்புள்ளது. இந்த முறை ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் உடனான ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.

இந்தியா விளையாடும் போட்டிகள் (குரூப் சுற்று மட்டும்)

  • செப்டம்பர் 10 - இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
  • செப்டம்பர் 14 - இந்தியா vs பாகிஸ்தான்
  • செப்டம்பர் 19 - இந்தியா vs ஓமன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x