Published : 21 Jul 2025 06:15 AM
Last Updated : 21 Jul 2025 06:15 AM
லண்டன்: 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர்கள் விலகியதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறஇருந்த போட்டி ரத்தானது.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவு, தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்திய அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இந்திய மூத்த வீரர்கள் அணியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் விலகினர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றம்சாட்டி அவர்கள் விளையாட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று போட்டி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT