Published : 09 Jul 2025 06:42 AM
Last Updated : 09 Jul 2025 06:42 AM
சென்னை: உலகில் உள்ள 7 கண்டங்களில், உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த வீராங்கனைக்கு , சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவர் தற்போது சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின், உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு, பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2023-ல் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து முத்தமிழ் செல்விக்கு, தமிழ்நாடு அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. மேலும் அவருக்கு அரசு சார்பில் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.
இதையடுத்து மீதமுள்ள 6 கண்டங்களில் உள்ள, உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைத்து வந்தார். கடந்த ஜூன் 16-ல், 7வது கண்டமாக, வட அமெரிக்காவில் உள்ள தெனாலி மலை சிகரத்தில் ஏரி சாதனை படைத்தார்.
இதன் மூலம் மிகக் குறைந்த காலத்தில் உலகின் 7 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏறிய இந்தியாவின் முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து நேற்று திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில், உறவினர்கள், நண்பர்கள், பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT