Published : 28 Jun 2025 08:46 AM
Last Updated : 28 Jun 2025 08:46 AM
திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. டி. சந்தோஷ் குமார் 26, அருண் கார்த்திக் 5, அதிஷ் 19, நிர்மல் குமார் 16, ரித்திக் ஈஸ்வன் 0, சோனு யாதவ் 29, அட்னன் கான் 22, என்.எஸ்.ஹரீஷ் 43 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் அணி சார்பில் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, ஜி.பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.
பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது. அந்த அணியின் விமல் குமார் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். ஹுன்னி சைனி 14 பந்துகளில் 37 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.
ரவிச்சந்திரன் அஸ்வின் 5, ஷிவம் சிங் 2, பாபா இந்திரஜித் 15, மான் பாப்னா 38, எச்.தினேஷ் 17, எம்.கார்த்திக் சரண் 11 ரன்கள் சேர்த்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். அதிரடியாக விளையாடிய ஹுன்னி சைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT