Published : 25 Jun 2025 09:15 PM
Last Updated : 25 Jun 2025 09:15 PM
சிட்னி: “இப்படித்தான் கிரிக்கெட் ஆட வேண்டுமென எம்சிசி கோச்சிங் மேனுவலில் கூட இல்லாத டெக்னிக்கை கொண்டிருப்பவர் ரிஷப் பந்த். அவரது பேட்டிங் பார்க்கவே ரொம்ப த்ரில்லாக இருக்கிறது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.
‘ஆண்டர்சன் சச்சின் டிராபி’ டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி இருந்தாலும் ரிஷப் பந்த் ஆட்டம் எல்லோரது பார்வையையும் பெற்றிருந்தது. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் பந்த் சதம் விளாசி இருந்தார். இந்நிலையில், அவரது ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் புகழ்ந்துள்ளார்.
“என்னவொரு அற்புதமான வீரர். அவர் (ரிஷப் பந்த்) எனக்கு ஆடம் கில்கிறிஸ்டை நினைவுபடுத்துகிறார். அந்த இடத்தில் பேட் செய்து, விரைந்து ரன் எடுக்க கூடிய திறன் கொண்ட ஒரு விக்கெட் கீப்பரை ஒரு அணி கொண்டிருப்பது நிச்சயம் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதுதான் ரிஷப் பந்த் ஆட்டத்தின் அழகியல். மிக வேகமாக ரன்கள் எடுக்கிறார். இது கிரிக்கெட் போட்டிகளில் அவர் சார்ந்துள்ள அணிக்கு வெற்றி வாய்ப்புகளை வழங்கும். அவர் ஒரு அற்புதமான வீரர். அவர் விளையாடிய ஷாட்டுகள் சில கடைசியாக எம்சிசி பயிற்சி கையேட்டை நான் பார்த்தபோது கூட இல்லை.
ஒரு பேட்ஸ்மேனாக ஆட்ட முறையை அவர் தன் பாணியில் மறு உருவாக்கம் செய்துள்ளார். இன்றைய நவீன கால தொழில்நுட்பம் மற்றும் பேட்டுகள் மாறி உள்ளன. அது மறுப்பதற்கு அல்ல. பழைய பேட்டுகளில் இந்த வகை ஷாட்களை ஆடுவது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அவரது ஆட்டம் பார்க்கவே உற்சாகம் தருகிறது. அவரிடமிருந்து அடுத்து என்ன வரும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. இந்த பந்தில் இதுதான் செய்வார் என்றெல்லாம் நமக்கு தெரியாது.
அவர் விக்கெட்டை விட்டு கொஞ்சம் நகர்ந்து வந்து வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்யலாம். அல்லது அவரது பாணி பாலிங் (Falling) ரேம்ப் ஷாட் ஆடலாம். தனது ஆட்டத்தின் மூலம் எதிரணியை யோசிக்க செய்பவர். அவர் ஒரு மேட்ச் வின்னர்” என கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT