Published : 25 Jun 2025 07:32 AM
Last Updated : 25 Jun 2025 07:32 AM
திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபா இந்திரஜித் 40 பந்துகளில், 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 63 ரன்களும் விஜய் சங்கர் 46 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் விளாசினர்.
179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் சுரேஷ் குமார் 63, ஜெகதீசன் கவுசிக் 45, சஞ்ஜய் யாதவ் 29 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சுதார் வீசிய கடைசி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தது.
முதல் 3 பந்துகளில் திருச்சி அணி ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்களை சேர்த்தது. ஆனால் அடுத்த 3 பந்துகளில் 2 விக்கெட்களை பறிகொடுத்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணிக்கு இது தொடர்ச்சியான 6-வது வெற்றியாக அமைந்தது. நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் அந்த அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT