Last Updated : 20 Jun, 2025 09:32 AM

1  

Published : 20 Jun 2025 09:32 AM
Last Updated : 20 Jun 2025 09:32 AM

‘இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் வெற்றியை விட பெரியது’ - கேப்டன் ஷுப்மன் கில்

லீட்ஸ்: தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அயலக மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் வெற்றியை காட்டிலும் பெரியது என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனான ஷுப்மன் கில் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று (ஜூன் 20) லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்கள் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ள முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தது. “இங்கிலாந்தில் கேப்டனாக அணியை வழிநடத்தும் வாய்ப்பு என்பது ஒரு வீரருக்கு அதிகம் கிடைக்காது. இரண்டு முறைதான் அந்த வாய்ப்பு கிடைக்கும். ஒரு தலைமுறையின் சிறந்த வீரர் என்றால் மூன்று முறை கூட அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், ஐபிஎல் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதை காட்டிலும் பெரிது. அது கவுரவுமும் கூட.

கேப்டனாக என்னுடைய செயல்பாடு எப்படி என்பதை ஆகஸ்ட்டில் தெரியவரும். ரிஷப் பந்த் மற்றும் எனக்கும் இடையில் சிறந்த புரிதல் உள்ளது. இருவரும் ஒருமித்த சிந்தனையை கொண்டவர்கள். அது நிச்சயம் அணியின் சூழலிலும் வெளிப்படும். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஷுப்மன் கில், மொத்தம் 1893 ரன்கள் எடுத்துள்ளார். ஆறு சதங்கள் பதிவு செய்துள்ளார். அவருக்கு அணியில் உள்ள சீனியர் வீரர்களான பும்ரா, கே.எல்.ராகுல் போன்றவர்களும் களத்தில் நிச்சயம் உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x