Published : 17 Jun 2025 07:16 AM
Last Updated : 17 Jun 2025 07:16 AM
மேற்கு இந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி வடக்கு அயர்லாந்தில் உள்ள பிரெடி கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 256 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரரான எவின் லீவிஸ் 44 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷாய் ஹோப் 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், கீசி கார்ட்டி 22 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன 48 ரன்களும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் பந்துவீச்சில் மேத்யூ ஹம்ப்ரேஷ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
257 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ராஸ் அடேர் 48, ஹாரி டக்டர் 38, மார்க் அடேர் 31 ரன்கள் சேர்த்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அகீல் ஹோசைன் 3, ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் இரு ஆட்டங்களும் மழை காரணமாக ரத்தாகியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT