Published : 15 Jun 2025 10:08 AM
Last Updated : 15 Jun 2025 10:08 AM

‘சாம்பியன்ஸ்’ தென் ஆப்பிரிக்கா - வரலாற்று ‘சம்பவ’ நாளில் நடந்தது என்ன? | ஒரு ரவுண்டப்

லார்ட்ஸ்: ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்க அணி.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 5, மார்கோ யான்சன் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 57.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேவிட் பெடிங்ஹாம் 45, கேப்டன் தெம்பா பவுமா 36 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 6, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 58, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் சேர்த்தனர். 282 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 56 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. தனது 8-வது சதத்தை விளாசிய எய்டன் மார்க்ரம் 102 ரன்களும், தெம்பா பவுமா 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெற்றிக்கு மேற்கொண்டு 69 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 83.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தெம்பா பவுமா 134 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 207 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் விளாசிய நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது.

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 43 பந்துகளில், 8 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்டனார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக எய்டன் மார்க்ரம் தேர்வானார். ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி 27 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் பட்டம் வென்றுள்ளது.

அந்த அணி கடைசியாக 1998-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்றிருந்தது. இந்த 27 வருட காலங்களில் பல ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி நாக்-அவுட் சுற்றுகளில் பரிதாபமாக தோல்வியை சந்தித்து வெளியேறி உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்திருந்தது.

ஐசிசி தொடர்களில் முக்கியமான கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்து வெளியேறுவதால் அந்த அணி மீது ‘சோக்கர்ஸ்’ என்ற முத்திரை குத்தப்பட்டது. கால் நூற்றாண்டை கடந்து இந்த முத்திரையை தற்போது தெம்பா பவுமா தலைமையிலான போராட்ட குணம் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி உடைத்தெறிந்துள்ளது.

சவால் கொடுத்த ஆஸி.: ஆஸ்திரேலிய அணி எளிதாக சாம்பியன் பட்டத்தை விட்டுக்கொடுக்கவில்லை. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக ஸ்டெம்புகளை நோக்கி குறிவைத்து வீசி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனால் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற ஆட்டத்தில் 3 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் இதற்கு முன்னர் ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பி உள்ளனர். ஆனால் இம்முறை அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. முதல் 90 நிமிடங்களுக்குள் ஆஸ்திரேலிய அணி தங்களது 3 ரிவியூக்களையும் வீணாகப் பயன்படுத்தினர், ஆனால் இறுதிவரை போராடினர். 80 ஓவர்களுக்கு பிறகு உடனடியாக புதிய பந்தை கையில் எடுத்தனர். ஆனால் ஆடுகளம் தட்டையாக செயல்பட தொடங்கியதால் எந்தவித திருப்பத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றியில் எய்டன் மார்க்ரமின் பேட்டிங் முக்கிய பங்கு வகித்தது. அவர், களத்தில் 6 மணி நேரம் 23 நிமிடங்கள் செலவிட்டு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். வெற்றிக்கு 6 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் எய்டன் மார்க்ரம் (136), ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா அதை கொண்டாடவில்லை. அதற்கு பதிலாக, அந்த அணியின் வீரர்கள் மார்க்ரமின் முதுகில் தட்டிக்கொடுத்து வாழ்த்தினர். இதை கண்ட லார்ட்ஸ் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

ரூ. 30 கோடி பரிசு: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு கதையுடன் ரூ.30.80 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணி ரூ.18.49 கோடியை பரிசாக பெற்றது.

தோல்வியை சந்திக்காத கேப்டன்: தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை சந்திக்காத கேப்டனாக வலம் வருகிறார். தொடர்ச்சியாக அவர், கேப்டனாக 9 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். இந்த வகையில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்த இங்கிலாந்தின் பெர்சி சாப்மேனுடன் (9 வெற்றிகள்) சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார் தெம்பா பவுமா.

‘தகுதியானவர்கள்’: தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும்போது, “எப்போதும் விஷயங்கள் விரைவாக மாறக்கூடும், ஆனால் அது இங்கு மிகத் தொலைவில் இருந்தது. சில விஷயங்களை நாங்கள் சரியாகச் செய்யவில்லை. முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலை பெற்ற பிறகும் எதிரணியை வீழ்த்தவில்லை.

4-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி எங்களுக்கு ஒரு வாய்ப்பைகூட கொடுக்கவில்லை. இது தென் ஆப்பிரிக்க அணி ஏன் இங்கே இருக்கிறார்கள் என்பதையும், வெற்றியாளர்களாக இருக்க தகுதியானவர்கள் என்பதையும் காட்டியது. இறுதிப் போட்டிக்கு வந்தது மிகப்பெரிய சாதனை, ஷூட்அவுட் ஆக அமைந்த ஆட்டம் சரியான பக்கத்தில் முடிவடையவில்லை” என்றார்.

‘வெற்றியே பதிலடி’: தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறும்போது, “ஓர் அணியாக நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். பல்வேறு தொடர்களில் முக்கியமான கட்டங்களில் வீழ்ந்து ஏமாற்றத்தின் வேதனையை அடைந்தோம். தற்போது இந்த வெற்றி பல வெற்றிகளை கொண்டு வரும் என்று நம்புகிறேன். ரபாடா ஒரு மகத்தான வீரர், சில வருடங்களில் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இருப்பார் என்று நினைக்கிறேன். சர்ச்சைக்கு மத்தியில் அவர், விளையாடி சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார்.

மார்க்ரம் நம்பமுடியாத வகையிலான சிறந்த வீரர். புள்ளிவிவரங்கள் முக்கியம், ஆனால் நாங்கள் பார்ப்பது குணம்தான், மார்க்ரமிடம் அது இருக்கிறது. அவர், எங்களுக்கு கிடைத்த இன்னொரு மகத்தான வீரர். நாங்கள் பலவீனமான அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்ததாக சிலர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இந்த வெற்றி அவர்களுக்கான பதிலாகும்” என்றார்.

ஆட்ட நாயகன் எய்டன் மார்க்ரம்: “முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன பிறகு விஷயங்கள் எப்படி நடந்தன என்பது விசித்திரமாக இருக்கிறது. கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை, களத்தில் சிறிது நேரம் செலவிட்டு ரன்கள் எடுத்தேன், எல்லாம் சரியாக அமைந்ததில் மகிழ்ச்சி. லார்ட்ஸ் மைதானம் ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் விளையாட விரும்பும் இடம்.

ஏராளமான தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டு களித்தனர். இது சிறப்பான நாட்களில் ஒன்றாகும். ஆட்டம் ஒருதலைபட்சமாக அமையவில்லை. அழுத்தத்தை உள்வாங்கி கொண்டு ரன்கள் சேர்ப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிவதில்தான் அனைத்தும் உள்ளது” என தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x