Published : 14 Jun 2025 07:56 PM
Last Updated : 14 Jun 2025 07:56 PM
லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இதன் மூலம் 1998-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி ஐசிசி தொடரை வென்று அசத்தியுள்ளது.
சுமார் 27 ஆண்டு காலம் ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கி வந்து நழுவ விட்டுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. எத்தனையோ அரை இறுதி, இறுதி என அதை சொல்லலாம். கடந்த 2015 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது. அப்போது அந்த அணியின் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான ஏபி டிவில்லியர்ஸ் மைதானத்தில் அப்படியே கலங்கிய தருணம் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. தங்களை எதிர்த்து ஆடும் அணிகள் மட்டுமல்லாது மழையும் தென் ஆப்பிரிக்க அணியின் சாம்பியன் கனவை கரைத்துள்ளது.
இந்த நிலையில்தான் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதுவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் தலா 14 விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஆனால், மூன்றாம் நாள் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எய்டன் மார்க்ரம் மற்றும் தெம்பா பவுமா, அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
282 ரன்கள் என்ற இலக்கை நான்காவது இன்னிங்ஸில் வெற்றிகரமாக விரட்டி சாதனை படைத்து பட்டத்தையும் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. 207 பந்துகளில் 136 ரன்களை சேர்த்த மார்க்ரம் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இறுதியாக, தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி தொடரை வென்றுள்ள இந்த தருணம் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் மகிழ்ச்சி தரும் விஷயமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT