Published : 13 Jun 2025 07:41 AM
Last Updated : 13 Jun 2025 07:41 AM
பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக மைதானத்துக்கு வெளியே லட்சகணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர்.
இதுதொடர்பாக கப்பன் பூங்கா போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகம், பாராட்டு விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட டிஎன்ஏ நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து ஆர்சிபி அணியின் வணிக பிரிவு நிர்வாகி நிக்கோல் சோசலே, டிஎன்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ, வணிகப்பிரிவின் நிர்வாகி கிரண், ஒருங்கிணைப்பு நிர்வாகி சுமந்த் ஆகியோரை போலீஸார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர்.
கைதான 4 பேரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஜாமீன்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ணகுமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரின் வாதத்துக்கு பின்னர் நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ணகுமார், “பெங்களூரு நெரிசல் உயிரிழப்புகளுக்கு காரணம் யார் என்பதை அரசு இன்னும்முறையாக விசாரிக்கவில்லை. அதற்குள் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது தெளிவாகிறது.
எனவே கைதான ஆர்சிபி அணியின் வணிகபிரிவு நிர்வாகி நிக்கோல் சோசலே, டிஎன்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ, வணிகபிரிவு நிர்வாகி கிரண், ஒருங்கிணைப்பு நிர்வாகி சுமந்த் ஆகிய 4 பேருக்கும் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது”என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT