Published : 10 Jun 2025 05:21 AM
Last Updated : 10 Jun 2025 05:21 AM
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் சீசன் போட்டிகளை ஏற்கெனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில் தற்போது சிறிய மாற்றம் கொள்ளப்பட்டுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி வரும் அக்டோபரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 2-ம் தேதியும், 2-வது போட்டி கொல்கத்தாவில் அக்டோபர் 10-ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதில் 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியை தொடர்ந்து நவம்பரில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் மாத மத்தியில் டெல்லியில் காற்று மாசு அதிகம் இருக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கையை பிசிசிஐ மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
ஏனெனில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நவம்பர் இறுதியில் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள் முகக்கவசம் அணிந்து விளையாடினார்கள். அந்த அணியின் வீரர்கள் சிலர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதை கருத்தில் கொண்டே தற்போது பிசிசிஐ போட்டியை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் செப்டம்பர் 14-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தத் தொடரின் முதல் 2 ஆட்டங்கள் நியூ சண்டீகரிலும், கடைசி போட்டி டெல்லியிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானம் மற்றும் ஆடுகளங்களின் மறுசீரமைப்பு காரணமாக இந்தத் தொடர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT