Published : 09 Jun 2025 11:56 PM
Last Updated : 09 Jun 2025 11:56 PM
லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-க்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன. 11-ம் தேதி இந்த ஆட்டம் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், இதில் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜ் பேசியுள்ளார். “இதில் வெற்றி பெற வேண்டுமென்பது எங்களுக்காக மட்டுமல்ல. எங்களது அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்காவும் தான். அவர்கள் வெளிப்படுத்திய அதே சிறப்பான ஆட்டத்தை நாங்களும் வெளிப்படுத்துவோம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான பயணம் தொடங்கிய போது நாங்கள் இந்த இடத்தில் இருப்போம் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், நாங்கள் ஒவ்வொரு தொடராக மேம்பட்டோம், வளர்ச்சி கண்டோம். எங்கள் அணியில் அனுபவமும், இளமையும் கலந்துள்ளது. இந்த நிலையை எட்ட கடுமையாக உழைத்தோம்.
இதற்கு முன்பு எங்களது முயற்சிகளில் நாங்கள் இரண்டு அரையிறுதி மற்றும் இரண்டு இறுதிப் போட்டிகளில் விளையாடுவோம் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதை நாங்கள் செய்து காட்டினோம். அதை போல இந்த முறை மிஸ் ஆகாது. நாங்கள் எங்களது பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். அதை சரியாக செய்தால் பல ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘நம்பர் 1’ அணியாக மீண்டும் உருவெடுப்போம்” என அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT