Published : 09 Jun 2025 10:35 PM
Last Updated : 09 Jun 2025 10:35 PM
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டார். லண்டனில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெற்ற நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது.
தற்போது 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்தப் பட்டியலில் 115 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11-வது இந்தியர் ஆகியுள்ளார் தோனி.
கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார் தோனி. கடந்த 2007-ம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். 2011-ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி, 10773 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 50.57. 10 சதம் மற்றும் 73 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி, 4876 ரன்களை எடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2019-ல் இந்திய அணிக்காக அவர் விளையாடி இருந்தார். 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம் தான் அவர் கடைசியாக விளையாடிய போட்டி. 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT