Published : 09 Jun 2025 11:55 AM
Last Updated : 09 Jun 2025 11:55 AM

த்ரில் ஒருநாள் போட்டி: ஸ்காட்லாந்தை கதிகலங்கடித்த நேபாளத்தின் மகா விரட்டல்

ஸ்காட்லாந்தில் உள்ள டுண்டீ நகரத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை லீக் ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்காட்லாந்தை மீண்டுமொரு முறை அச்சுறுத்தியது நேபாள் அணி. ஸ்காட்லாந்தின் 323 ரன்கள் இலக்கை விரட்டிய நேபாளம் 321 வரை போராடி வந்து 2 ரன்களில் தோல்வி கண்டது.

இதற்கு முந்தைய போட்டியில்தான் ஸ்காட்லாந்தின் 297 ரன்கள் இலக்கை வெற்ற்கரமாக சேஸிங் செய்து சாதித்தது நேபாளம். நேற்று 323 ரன்களை எடுத்தும் ஸ்காட்லாந்தினால் இலக்கைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம் என்ற நிலைமைக்கு நேபாள் ஆளாக்கியது.

ஏற்கெனவே ஸ்காட்லாந்து அணியை ஒரு பந்து மீதமிருக்கையில் வென்றிருந்த நேபாள் அதன் பிறகான போட்டியில்தான் 297 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டியது. நேற்று ஸ்காட்லாந்து சொந்த மண்ணில் அந்த அணியை தொடர் 3வது தோல்வி அடையச் செய்திருக்கும் நேபாளம்.

ஸ்காட்லாந்து கேப்டன் ரிச்சி பெரிங்டன் பிரமாதமாக ஆடி 114 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விளாசி 102 ரன்களை எடுத்தார், இது இவரது 6வது ஒருநாள் சதமாகும். கடைசியில் ஸ்காட்லாந்து வீரர் மைக்கேல் லீஸ்க் இறங்கி செம காட்டுக் காட்டி விட்டார். 62 பந்துகளையே சந்தித்த லீஸ்க் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 96 ரன்களை விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஸ்காட்லாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 323 ரன்களை எடுத்து, அப்பாடா இந்தப் போட்டியிலாவது வெல்லலாம் என்ற நம்பிக்கையில் உணவு இடைவேளைக்காக பெவிலியன் திரும்பியது, ஆனால் உணவு இடைவேளை முடிந்து சாப்பிட்ட சாப்பாடு வெகுவிரைவில் செரித்து விடும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

நேபாள் 3 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழந்தாலும் போராட்டத்தைத் தன்கையில் எடுத்துக் கொண்டு மீண்டெழுந்தது. அந்த அணியின் பீம் ஷார்க்கி 85 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 73 ரன்களை எடுக்க ஆரிஃப் ஷெய்க் 39 ரன்களை எடுத்தார், இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்காக 94 ரன்களை 18 ஓவர்களில் சேர்த்தனர். ஆனால் இருவரையும் முறையே லீஸ்க் மற்றும் ஜோன்ஸ் வெளியேற்ற 163/5 என்று ஒரு முட்டுக்கட்டை விழுந்தது.

அதோடு மட்டுமல்லாமல் குல்ஷன் ஜாவும் விரைவில் ஆட்டமிழக்க நேபாள் அணி 183/6 என்று 35.4 ஓவர்களில் இருந்தது. அடுத்த 86 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 141 ரன்கள்.

ஆனால் விட மாட்டோம் என்று நேபாள் மீண்டும் எழுந்து நின்றது. 7வது விக்கெட்டுக்காக தீபேந்தர் சிங் அய்ரீ (56), சோம்பால் காமி (67) இணைந்து 105 ரன்களை 7வது விக்கெட்டுக்காக சுமார் 11 ஓவர்களில் சேர்க்க 288/6 என்று ஸ்கோர் உயர்ந்த போது திபேந்தர் சிங் அய்ரியை கஸால் வீழ்த்தினார். 48வது ஓவர் முடிவில் சோம்பால் காமியை ஜோன்ஸ் வீழ்த்த ஸ்கோர் 308/8 என்று ஆனது. அப்போதும் நேபாள் விடவில்லை அந்த அணியின் கே.சி.கரன் இறங்கி 1 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்களை விளாசினார். 50வது ஓவரில் ஆட்டமிழக்க கடைசியாக லலித் ராஜ்வன்ஷி ஆட்டமிழக்க ஸ்கோர் 321-ல் முடிந்தது. 34/3லிருந்து அபார சேசிங் செய்து ஸ்காட்லாந்தை கதிகலங்கடித்தது நேபாள்.

ஸ்காட்லாந்து தரப்பில் மெக்கன்சி ஜோன்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சஃப்யான் ஷரீப், மைக்கேல் லீஸ்க் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ஸ்காட்லாந்தின் வீரர் மைக்கேல் லீஸ்க் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x