Published : 09 Jun 2025 06:49 AM
Last Updated : 09 Jun 2025 06:49 AM
மியூனிச்: யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது போர்ச்சுகல் அணி. இதன் மூலம் நேஷன்ஸ் லீக் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றுள்ளது போர்ச்சுகல்.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் ஐபீரிய அண்டை நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் இறுதிக்கு முன்னேறி இருந்தன. வலுவான ஸ்பெயின் அணி தனது வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதை தகர்த்து காட்டியது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி.
ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு முதல் கோலை பதிவு செய்தார் அந்த அணியின் மார்ட்டின் ஜூபிமெண்டி. இது சர்வதேச அளவில் அவரது இரண்டாவது கோல். இருப்பினும் அதற்கான பதில் கோலை 5 நிமிடங்களில் வலைக்குள் தள்ளியது போர்ச்சுகல். நுனோ மென்டிஸ் 26-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்காக கோல் பதிவு செய்தார்.
பின்னர் 45-வது நிமிடத்தில் மைக்கேல் ஒயர்சபல், ஸ்பெயின் அணிக்காக 2-வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ கோல் பதிவு செய்தார். இது சர்வதேச அளவில் அவரது 138-வது கோல். இதன் மூலம் ஆட்டம் 2-2 என சமன் ஆனது. கூடுதல் நேரத்திலும் வெற்றிக்கான கோலை எந்த அணியாலும் பதிவு செய்ய முடியவில்லை.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளிலும் கோல் பதிவு செய்தது. போர்ச்சுகல். மறுபக்கம் ஸ்பெயின் அணி 3 கோல்களை பதிவு செய்ய நேஷன்ஸ் லீக் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றது போர்ச்சுகல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT