Published : 08 Jun 2025 02:52 PM
Last Updated : 08 Jun 2025 02:52 PM
பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் கோகோ காஃப். இந்நிலையில், அவருடன் இறுதிப் போட்டியில் விளையாடிய அரினா சபலென்கா, இந்த தோல்வி வேதனை அளிப்பதாக பேசியுள்ளார். இந்த ஆட்டம் நேற்று பாரிஸில் நடைபெற்றது.
“இந்த தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது கேரியரில் மிகவும் மோசமான ஃபைனல் இது. கடந்த இரண்டு வார காலம் முழுவதும் சிறந்த முறையில் டென்னிஸ் விளையாடினேன். இகா ஸ்வியாடெக் போன்ற சிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக கடினமான ஆட்டத்தில் விளையாடி இருந்தேன்.
இந்த வெற்றிக்கு கோகோ காஃப் தகுதியானார். இருந்தாலும், அரையிறுதியில் என்னை இகா ஸ்வியாடெக் வீழ்த்தி இருந்தால் சாம்பியன் பட்டம் வென்று இருப்பார் என நினைக்கிறேன். என்னால் பட்டம் வெல்ல முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். நிச்சயம் நான் வலுவாக மீண்டு வருவேன்” என அரினா சபலென்கா தெரிவித்தார்.
இந்த இறுதி ஆட்டத்தை 6-7(5), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கோகோ காஃப் வென்றார். முதல் செட்டில் பின்னடைவை எதிர்கொண்ட போதும் ஆட்டத்தில் அவர் காம்பேக் கொடுத்து பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
“நான் இங்கு பட்டம் வென்றுள்ளேன். இப்போது இகா ஸ்வியாடெக் குறித்து பேசவில்லை. அவரை மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் நான் வீழ்த்தி உள்ளேன். ஆனால், அப்படி சொல்வது நியாயமானதாக இருக்காது. ஏனெனில், ஆட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
பிரெஞ்சு ஓபன் இறுதியில் யாரை நான் சந்திக்க வேண்டுமென விரும்பினேன் என்றால் அது இகா ஸ்வியாடெக் தான். அரினா சபலென்கா சிறப்பான ஆட்டத்தை விளையாடியது நான் அப்படி நினைத்ததற்கு காரணம். இருந்தாலும் யார் வாந்தாலும் அவரை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும் என நான் உறுதியாக இருந்தேன்” என கோகோ காஃப் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT