Published : 08 Jun 2025 08:42 AM
Last Updated : 08 Jun 2025 08:42 AM
செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 59 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினனார். ஜேமி ஸ்மித் 38, ஜேக்கப் பெத்தேல் 23 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ரொமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
189 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக எவின் லீவிஸ் 39, ராஸ்டன் சேஸ் 24, ஜான்சன் சார்லஸ் 18, ரொமாரியோ ஷெப்பர்டு 16, ஆந்த்ரே ரஸ்ஸல் 15 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான லியாம் டாவ்சன் 4 ஓவர்களை வீசி 20ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
மேத்யூ பாட்ஸ், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஆதில் ரஷீத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக லியாம் டாவ்சன் தேர்வானார். 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி இன்று (8-ம் தேதி) இரவு 7 மணிக்கு பிரிஸ்டலில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT