Published : 05 Jun 2025 06:40 AM
Last Updated : 05 Jun 2025 06:40 AM

ஆர்சிபி அணிக்காக 18 வருடங்களாக எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன் - மனம் திறக்கும் விராட் கோலி

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிப் போட்டியில் பஞசாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் 18 வருடங்களாக ஆர்சிபி அணிக்கு விளையாடி வரும் விராட் கோலி தற்போதுதான் முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைகளில் வருடி உள்ளார். ஆட்டத்தின் கடைசி பந்து வீசப்பட்டதும் மைதானத்தில் விராட் கோலி உணர்ச்சி பெருக்கில் ஆனந்த கண்ணீர் சிந்தியது ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. வெற்றிக்கு பின்னர் விராட் கோலி கூறியதாவது:

இந்த வெற்றி அணிக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ரசிகர்களுக்கும் முக்கியம். கோப்பையை வெல்வதற்கு 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த அணிக்கு எனது இளமை, பெருமை மற்றும் அனுபவத்தை அளித்துள்ளேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல முயற்சித்தேன். எனக்குள்ள அனைத்து திறனையும் கொடுத்துள்ளேன். சாம்பியன் பட்டம் தருணம் வந்திருப்பது நம்பமுடியாத உணர்வாக உள்ளது.

இந்த நாள் வரும் என்று நான் நினைத்தது இல்லை. கடைசி பந்து வீசப்பட்ட உடனேயே நான் உணர்ச்சிவசப்பட்டேன். அது எனக்கு ரொம்ப முக்கியம். நான் சொன்ன மாதிரி, இந்த அணிக்கு என் ஒவ்வொரு சக்தியையும் கொடுத்திருக்கேன். சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அற்புதமான உணர்வை தருகிறது.

டி வில்லியர்ஸ் இந்த அணிக்காக செய்த விஷயங்கள் மகத்தானது. இந்த வெற்றி எங்களுக்கானது என்பதுபோல், உங்களுக்கானதும் என்று நான் அவரிடம் கூறியிருந்தேன். ஏனெனில் ஆர்சிபி அணிக்காக அவர் சிறப்பான விஷயங்களை செய்திருந்தார். அதிகமுறை ஆட்ட நாயகன் விருதுகளை அவர், பெற்றிருக்கிறார்.

டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்று 4 ஆண்டுகளாகி விட்டன. எனினும் இந்த அணிக்கு, ஒரு நபராக எனக்கு, எங்களுடைய நட்புறவு மற்றும் பெங்களூரு மக்கள் மீது அவர் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. வெற்றி மேடையில் எங்களுடன் இருக்க அவர், தகுதியானவர்.

ஆர்சிபி அணிக்காக கடந்த 18 வருடங்களாக என்னிடம் இருக்கிற எல்லாத்தையும் கொடுத்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் இந்த அணிக்கு விசுவாசமா இருந்துள்ளேன். நான் வேற மாதிரி நினைத்த தருணங்கள் உள்ளன. ஆனால் இந்த அணியோடதான் இத்தனை வருடங்கள் பயணிக்கிறேன். அவர்கள் பின்னால் நான் நின்றேன் அவர்கள் என் பின்னால் நின்றார்கள்.

ஆர்சிபி அணி ஜெயிக்கணும்னு நான் எப்பவும் கனவு காண்பேன். வேற யாரோட ஜெயிக்கிறதை விட இது ரொம்ப ஸ்பெஷல். ஏனெனில் எனது மனது பெங்களூருடன் இருக்கிறது. என் ஆன்மா பெங்களூருடன் இருக்கிறது. ஐபிஎல்ல விளையாடுற கடைசி நாள் வரைக்கும் நான் விளையாடப் போற அணி ஆர்சிபிதான். அதனால் இந்த வெற்றி எல்லாவற்றும் மேலே இருக்கிறது.

ஐபிஎல் மிகவும் தீவிரமான, உயர்தரமான போட்டி, இது இன்றைய உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்கது. நான் பெரிய போட்டிகளை, பெரிய தருணங்களை வெல்ல விரும்புவேன். ஆனால் இந்த கோப்பை நான் தவறவிட்ட ஒன்று. இதை அடைந்ததால் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் சிந்தினேன். ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு அதிக வருடங்கள் எனக்கு கிடைக்கப்போது இல்லை.

ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு மேலும் பல ஆண்டுகள் கிடைக்கப் போவதில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையும் ஒருநாள் முடிவுக்கு வரும். எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் போது என்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டேன் என்று நான் சொல்ல வேண்டும்.

எனவே நான் முன்னேற வழிகளைத் தேடுகிறேன். ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியின் கீழ் என்னால் விளையாட முடியாது. 20 ஓவர்களை விளையாடி களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். நான் அந்த வகையான வீரர். எங்களது திட்ட அணுகுமுறை குறித்து பலர் கேள்வி எழுப்பினார்கள். எனினும் எங்கள் அணுகுமுறையில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.

இந்த அணியின் திறமையில் எங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இந்த நேரத்தில் ஒட்டுமொத்த அணிக்கும் பெரிய பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வெற்றி பெங்களூருக்கானது. ஒவ்வொரு வீரருக்கும், குடும்பத்தினருக்கும், அணி நிர்வாகத்திற்கும் உரியது.

இந்த தருணம் என் வாழ்க்கையில் நான் பெற்ற சிறந்த தருணங்களுள் ஒன்று. ஆனால் இது டெஸ்ட் கிரிக்கெட்டின் 5 தரநிலைகளுக்கு கீழ்தான் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை நான் அந்த அளவுக்கு மதிக்கிறேன், விரும்புகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டை இளம் வீரர்கள் மதித்து விளையாட வேண்டும். ஏனென்றால் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டால், உலகில் நீங்கள் எங்கு சென்றாலும் மக்கள் உங்கள் கண்களைப் பார்த்து கைகுலுக்கி, நீங்கள் விளையாட்டை மிகவும் நன்றாக விளையாடியுள்ளீர்கள் என்று கூறுவார்கள். இவ்வாறு விராட் கோலி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x