Published : 02 Jun 2025 10:29 PM
Last Updated : 02 Jun 2025 10:29 PM
ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த விரக்தியில் மேஜையை ஓங்கி தட்டினார்.
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் திங்கள்கிழமை அன்று ஆறாவது சுற்று ஆட்டத்தில் குகேஷ் மற்றும் கார்ல்சன் விளையாடினர். இதில் அபார கம்பேக் கொடுத்த குகேஷ் வென்றார்.
“ஆட்டத்தில் அதிகம் செய்ய எனக்கு எதுவும் இல்லை. அது எனக்கு தெளிவாக தெரிந்தது. அதனால் எனது நகர்வுகளை நான் தந்திரமாக முயற்சித்தேன். நான் தோற்றிருப்பேன். ஆனால், இன்று எனக்கு அதிர்ஷ்டமான நாள்.
நேரம் சார்ந்து அவருக்கு நெருக்கடி மற்றும் அழுத்தம் இருந்தது. அது அவரது கட்டுப்பாட்டை மீறச் செய்தது. இதை இந்த ஆட்டத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டேன்” என வெற்றிக்கு பிறகு குகேஷ் தெரிவித்தார்.
‘என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை’ என தோல்விக்கு பிறகு கார்ல்சன் சொல்லி இருந்தார். அதோடு தோல்வியடைந்த விரக்தியில் மேஜையை தட்டினார். கிளாசிக்கல் பிரிவில் கார்ல்சனுக்கு எதிராக குகேஷ் பெற்றுள்ள முதல் வெற்றி இது. இந்த தொடரின் முதல் சுற்றில் குகேஷை கார்ல்சன் வீழ்த்தி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT