Published : 02 Jun 2025 04:28 PM
Last Updated : 02 Jun 2025 04:28 PM

“ஐபிஎல் 2025-ன் மிகச் சிறந்த ஷாட்!” - ஸ்ரேயஸ் அய்யருக்கு டிவில்லியர்ஸ் புகழாரம்

ஐபிஎல் 2025-ன் ஆகச் சிறந்த இன்னிங்ஸை நேற்று ஸ்ரேயஸ் அய்யர் ஆடினார். அதில் அவர் பும்ரா வீசிய யார்க்கரை தேர்ட் மேனில் பவுண்டரி அடித்த ஷாட்டை 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் ‘இந்த ஐபிஎல் தொடரில் ஆடப்பட்ட ஷாட்களிலேயே ஸ்ரேயஸ் அய்யரின் அந்த பவுண்டரிதான் ஆகச் சிறந்தது’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

204 ரன்களை இலக்காகக் கொண்டு இறங்கும்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கடைசி 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவை. பும்ராவிடம் ஓவரைக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. ஏனெனில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக பும்ராவின் ஒரு ஓவர்தான் போட்டியையே மும்பைக்குச் சாதகமாக மாற்றியது. இப்போதும் பும்ராவையே நம்பியிருந்தார் பாண்டியா.

பும்ரா 140+ கிமீ வேக யார்க்கரை ஸ்டம்பை நோக்கி இறக்கினார். மிடில் ஸ்டம்பின் அடிப்பகுதி நொறுங்கியிருக்கும் அப்படிப்பட்ட யார்க்கர் அது. இதை தடுத்தாடுவது கடினத்திலும் கடினம் என்பது ஒருபுறம் இருக்க, அதை பவுண்டரிக்கு அனுப்புவதென்றால் ஸ்ரேயஸ் அய்யரின் ரிஃப்ளெக்ஸ் அற்புதத்தை என்னவென்று வர்ணிப்பது?

மட்டையை கடைசி நொடியில் இறக்கினார் அய்யர், பந்து தேர்ட்மேன் திசையில் பவுண்டரிக்குப் பறந்தது. திகைப்பூட்டும் ஷாட்.

“இது ஷாட் ஆஃப் த ஐபிஎல், என்னைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் தொடரின் ஆகச் சிறந்த ஷாட். பந்து நேராக மிடில் ஸ்டம்பைத் தாக்க வந்தது. துல்லிய யார்க்கர். மட்டையின் அடிப்பகுதியையே உடைக்கக் கூடிய யார்க்கர். அதை ஆடவே முடியாது. அதைப் போய் பவுண்டரிக்கு விரட்டினார் ஸ்ரேயஸ் அய்யர்.

மும்பை இந்தியன்ஸிடமிருந்து ஆட்டத்தைப் பறித்த ஷாட் அது. அதுவும் உலகின் தலை சிறந்த பவுலருக்கு எதிராக. நிச்சயம் நம்ப முடியாத பேட்டிங் அது. தூய ஆற்றல் மற்றும் உந்தம், என்ன ஒரு ஃபண்டாஸ்டிக் பிளேயர்.

இந்த உலகத்தில் இல்லாத இன்னிங்ஸ் இது. இந்த இன்னிங்ஸுக்காக வரும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் அய்யர் தகுதியானவர். வாழ்வா சாவா போட்டியில் மிகவும் நிதானமாக அமைதியாக வெற்றி பெற்றுத் தந்தார். அவருக்குச் சாதகமாக எதுவும் இல்லை அங்கு, ஆனாலும் நிமிர்ந்து நின்றார் அய்யர்.

அவரது சிக்சர்கள் பார்ப்பதற்கு மிகவும் உற்சாகத்தை அளித்தது. அடிக்கும் போது அவர் தலை நேராக ஆடாமல் அசையாமல் இருந்தது. அவர் அமைதியானவர் செருக்குடையவர் அல்ல, இது அவரிடம் எனக்குப் பிடித்திருக்கிறது” என்று கூறினார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x