Published : 02 Jun 2025 03:24 PM
Last Updated : 02 Jun 2025 03:24 PM

மும்பை இந்தியன்ஸுக்கு ஆப்பு வைத்த மும்பையின் ஸ்ரேயஸ் அய்யர்!

ஐபிஎல் 2025 பிளே ஆப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெளியேற்றியது பஞ்சாப் கிங்ஸ் இதன் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அந்த அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் அணியாக இருப்பதும் இந்த ஐபிஎல் தொடரில் விசேடமாகும்.

இதன் மூலம் ஸ்ரேயஸ் அய்யர் 3-வது அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தன் கேப்டன்சியினால் அழைத்துச் சென்றுள்ளார். அய்யர் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 87 நாட் அவுட் என்று மும்பை இந்தியன்ஸுக்கு இறுதி ஆப்பு வைத்து இறுக்கினார். ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸின் 200 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டிச் சாதித்தது பஞ்சாப் கிங்ஸ்.

இந்தப் போட்டிக்கு முன்னதாக நாக் அவுட் சுற்றுக்களில் மும்பை இந்தியன்ஸ் 18-7 என்ற வெற்றி தோல்வி விகிதத்தை வைத்திருக்கும் பவர்ஃபுல் அணி. அதுவும் கோப்பை வெற்றியாளர் என்று கருதப்படும் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்திய பிறகே மும்பைக்கு அடுத்து கோப்பைதான் என்று அனைவரும் கனவு கண்டபோது கனவை சிதைத்தார் இன்னொரு மும்பை வீரர் ஸ்ரேயஸ் அய்யர்.

ஆட்டத்தின் 11வது ஓவரில் அஷ்வனி குமார் 4 ரன்களையும் முதல் ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்ட பும்ரா 7 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். பும்ராவை அவரது முதல் ஓவரில் ஜாஷ் இங்லிஸ் 4,6, 4, 6 என்று விளாசித்தள்ளியது அனைவருக்கும் அதிர்ச்சியே.

8 ஓவர்கள் மீதமிருக்க பந்துக்கு 2 ரன்கள் அடிக்க வேண்டும். பும்ராவுக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தன, இது மும்பைக்கு சாதகம். ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் பெரிய தவறிழைத்தது இங்குதான். முதல் போட்டியில் இந்த சீசனில் ஆடும் ரீசி டாப்லியை வீச அழைத்தார். அய்யர் அப்போது 15 பந்துகளில் 19 ரன்களில் இருந்தார், டாப்லியை கொண்டு வந்தவுடன் குஷியானார்.

இங்குதான் போட்டி பஞ்சாப் கிங்ஸ் பக்கம் சாய்ந்தது. டாப்லியின் முதல் பந்தை அய்யர் மகா அடி அடித்தார் சிக்ஸ். அதன் பிறகு மும்பை பவுலர்கள் ஸ்லாட்டில் வீச வீச அய்யர் மேலும் 7 சிக்சர்களை விளாசினார். அது மட்டுமல்ல 7 யார்க்கர் பந்துகளிலும் அய்யர் 13 ரன்களை எடுத்தார். இதில் பும்ரா யார்க்கரை அடித்த பவுண்டரியையும் சேர்த்து 3 யார்க்கர் பவுண்டரிகள் அடித்தார் அய்யர்.

ஆகவே ஃபுல் லெந்த், ஸ்லாட்டில் விழும் பந்துகளை அய்யர் அடித்து நொறுக்கினார் என்றவுடன் மீதமுள்ள முயற்சி ஷார்ட் பிட்ச் பந்துதான். ஆனால் அய்யர் அதையும் விட்டு வைக்காமல் 13 ஷார்ட் பிட்ச் பந்துகளில் 28 ரன்களை விளாசினார். இவ்வளவு பிரமாதமாக ஆடும் ஸ்ரேயஸ் அய்யர் இன்னும் ஐபிஎல் சதம் எடுக்கவில்லை என்பது பிறழ்வுதான்.

இங்கிலாந்து தொடரில் உண்மையில் கேப்டன்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டியவர் ஸ்ரேயஸ் அய்யர்தான். ஏனோ கம்பீருக்கும் அகர்க்கருக்கும் இந்த யோசனையே எழாமல் போனது ஆச்சரியம் தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x