Published : 01 Jun 2025 05:21 PM
Last Updated : 01 Jun 2025 05:21 PM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது. இந்நிலையில், ‘மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் அடிப்பது எப்படி?’ என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை பட்டம் வென்ற அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்த ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் அந்த அணிக்கு வென்று கொடுத்த வெற்றிக் கேப்டன் ரோஹித் சர்மா தான். இருப்பினும் கடந்த 2024-ம் ஆண்டு சீசன் முதல் ஹர்திக் பாண்டியா அந்த அணியை வழிநடத்தி வருகிறார்.
நடப்பு சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குவாலிபையர்-2 ஆட்டத்துக்கு மும்பை முன்னேறி உள்ளது. இதற்கும் இந்த சீசனில் லீக் சுற்றின் முதல் 5 ஆட்டங்களில் நான்கு தோல்விகளை மும்பை எதிர்கொண்டது. அதன் பின்னர் எழுச்சி பெற்று பிளே ஆஃப் வரை வந்துள்ளது.
“2018-ம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தியது நான் தான். 10 ஓவர்கள் முடிந்திருந்தபோது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்களை அவர்கள் எடுத்து இருந்தார்கள். அவர்கள் ஆட்டத்தில் மிகவும் பின்னடைவை எதிர்கொண்ட சமயம் அது. அப்போது மைதானத்தில் மின் இணைப்பு துண்டிப்பால் விளக்குகள் ஒளிரவில்லை. அதனால் சுமார் 20 நிமிடம் ஆட்டம் தடைபட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அதை பயன்படுத்தி பொல்லார்ட் விளாசினார். மும்பை 186 ரன்கள் எடுத்தது.
சில அணிகளுக்கு எப்போதாவது அதிர்ஷ்டம் இருக்கும். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் அடிக்கிறது. அது எப்படி என நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என அஸ்வின் தெரிவித்துள்ளார். தனது இந்தி யூடியூப் சேனலில் அஸ்வின் இதை பகிர்ந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT