Published : 01 Jun 2025 12:53 PM
Last Updated : 01 Jun 2025 12:53 PM
முனிச்: நடப்பு சாம்பியன்ஸ் லீக் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணி. அந்த அணியின் வெற்றி கொண்டாத்தின் போது மறைத்த தனது மகளின் நினைவை பகிர்ந்து தலைமை பயிரிச்சியாளர் லூயிஸ் என்ரிக்கே உருக்கமாக பேசி இருந்தார்.
ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் இன்டர் மிலன் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது பிஎஸ்ஜி. அதுவும் எம்பாப்பே, மெஸ்ஸி, நெய்மர் மாதிரியான நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமல் இம்முறை பட்டம் பிஎஸ்ஜி வென்றுள்ளது.
இந்நிலையில், மறைந்த தன் இளைய மகள் Xana-வின் நினைவாக, தானும் தன் செல்ல மகளும் இணைந்து பிஎஸ்ஜி கொடியை பிடித்திருப்பது போன்ற படம் கொண்ட டி-ஷர்ட்டை லூயிஸ் என்ரிக்கே அணிந்திருந்தார். “நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆட்டத்தின் கடைசியில் எனது குடும்பத்துக்காக பதாகையை ரசிகர்கள் ஏந்திய அந்த தருணம் உணர்வுப்பூர்வமானது. நான் எப்போதும் என் மகளின் நினைவில் தான் உள்ளேன்.
நாங்கள் வெற்றி பெறுகின்ற தருணத்தை காட்டிலும் தோல்வியை தழுவும் போது என் மகள் எங்களோடு இருப்பாள்” என பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே தெரிவித்தார். பார்சிலோனா அணி சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற போது தானும், தன் மகளும் மைதானத்தில் வெற்றிக்கொடி நாட்டிய அந்த தருணத்தை பிஎஸ்ஜி அணிக்காக ரீ-கிரியேட் செய்ய விரும்புவதாக கடந்த ஜனவரி மாதம் லூயிஸ் என்ரிக்கே சொல்லி இருந்தார். தற்போது அதை செய்துள்ளார்.
“இந்த முறை வெற்றியின் போது என் மகள் உடல் ரீதியாக இல்லை. ஆனால், மனதளவில் அவள் எங்களோடு இருப்பாள். அது எனக்கு மிகவும் முக்கியம்” என லூயிஸ் என்ரிக்கே அப்போது சொல்லி இருந்தார்.
ஸ்பெயின் நாட்டின் தேசிய கால்பந்து அணி, பார்சிலோனா கிளப் அணிகளுக்கு லூயிஸ் என்ரிக்கே பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியின் வரலாற்றில் 5-0 என்ற கோல் கணக்கில் மிகப்பெரிய வெற்றியை ஒரு அணி பெற்றுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT